Showing posts with label ஓஷோ. Show all posts
Showing posts with label ஓஷோ. Show all posts

10 January 2016

ஓஷோவின் ஞானக் கதைகள்

அந்தக் கப்பல் தனது தாயகத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தது. 
திடீரென்று கடல் கொந்தளித்தது. புயல் காற்று வீசியது. கப்பல் மூழ்க ஆரம்பித்தது. கப்பலில் இருந்த அனைவரும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.
இந்த சமயத்தில் யார்தான் பிரார்த்திக்காமல் இருப்பார்கள்? ஒரு நாத்திகன் கூட, "நான் இதுவரை கூறியவற்றிற்காக என்னை மன்னித்துவிடு. எப்படியும் என்னை கரைசேர வைத்துவிடு" என்று பிரார்த்திக்க ஆரம்பித்து விடுவான். 
ஆனால் ஒரு மகமதியத் துறவி மட்டும் வழிபடாமல் வெறுமனே அமர்ந்திருந்தார். பயணிகள் கோபம் கொண்டனர். 
"நீ ஒரு மதப்பற்றுள்ளவன். அங்கி அணிந்துள்ளாய். சூஂபிகள் அணியும் பச்சை நிற அங்கியணிந்துள்ளாய். நீயும் ஒரு துறவியா? நீ தானே பிரார்த்தனை செய்யும் முதல் மனிதனாக இருந்திருக்க வேண்டும்? " 
அவர்கள் மேலும் கூறினர்:
"நாங்கள் எல்லோரும் மதப்பற்று உள்ளவர்கள் அல்ல. நாங்கள் எல்லோரும் வெறும் வியாபாரிகள். மேலும் பிரார்த்தனை என்பது கூட எங்களுக்கு வியாபாரத்தைப் போன்றதுதான். 'கடவுளே நாங்கள் அதைக் கொடுக்கிறோம், இதைக் கொடுக்கிறோம், எங்களைக் காப்பாற்று' என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏன் மெளனமாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் வழிபடவில்லை. ?"
அதற்கு அவர், "நீங்கள் ஏற்கனவே கூறிவிட்டீர்கள், நான் ஒரு வியாபாரி என்று. கடவுள் நம்மையெல்லாம் முடிவுகட்ட விரும்பினால் நல்லது. அவர் நம்மை யெல்லாம் காப்பாற்ற விரும்பினாலும் நல்லது. நான் அவரோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன். நான் ஏன் வழிபட வேண்டும்? எதற்காக வழிபட வேண்டும்? " 
"வழிபாடு என்பது கொஞ்சம் ஒத்துப்போகாத தன்மை. நீ நடக்கக் கூடாது என்று விரும்புகிற ஏதோ ஒன்று நடக்கிறது. அதில் கடவுள் தலையிட வேண்டும், அதை நிறுத்த வேண்டும், அதை மாற்ற வேண்டும் என்று நீ விரும்புகிறாய். 
எனக்கு எந்தவித வியாபாரமும் இல்லை. நம்மைக் காப்பாற்ற வேண்டுமா மூழ்கடிக்க வேண்டுமா என்பது கடவுள் கவலைப்பட வேண்டிய ஒன்று !" என்று அந்த சூஂபி கூறினார். 
அவர் மேலும், "கடவுள் இந்தத் துறவியை காப்பாற்ற விரும்பினால் அது அவரது வேலை, அது என்னுடையதல்ல. அதே போல் அவர் நான் இறந்து போக வேண்டும் என்று விரும்பினாலும் அது அவரது வேலை. 
நான் பிறப்பதற்கு, அவரிடம் கேட்கவில்லை. திடீரென்று இந்த பூமிக்கு வந்தேன். ஆகவே மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது. எப்போது எனது பிறப்பு என்பது என் கையில் இல்லையோ அப்போது எப்படி மரணத்தை என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்? " என்று கூறினார். 
'இந்த மனிதன் பைத்தியமாக இருக்க வேண்டும் ' என்று அவர்கள் எண்ணினர். "உங்களை நாங்கள் பிறகு கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் ஒரு துறவியே இல்லை. உங்களிடம் மதப்பற்று இல்லை. நீங்கள் அபாயகரமான மனிதர். ஆனால் கவலைப்படவும், உங்களோடு சண்டை போடவும் இது நேரமல்ல!" என்று கூறிச்சென்றனர். 
அந்தக் கப்பலில் மிகவும் புகழ் வாய்ந்த செல்வம் உள்ள ஒருவன் லட்சக்கணக்கான வைரங்களுடன், விலையுயர்ந்த இதர பொருள்களுடனும் வந்து கொண்டிருந்தான். அவன் நிறையச் சம்பாதித்திருந்தான். 
நகரத்தில் ஒரு அழகான அரண்மனை அவனுக்கு இருந்தது. மிகவும் அழகான சலவைக்கல் மாளிகை. அரசனே மாளிகையைப் பார்த்துப் பொறாமை கொண்டுள்ளான். அந்த அரசனே பல சந்தர்ப்பங்களில், "என்ன விலையானாலும் பரவாயில்லை, நான் அதை கொடுக்கத் தயார். நீ இந்த மாளிகையை எனக்குக் கொடுத்து விடு" என்று கேட்டுள்ளான். 
ஆனால் அந்த மனிதன், "அது முடியாது, அந்த மாளிகைதான் எனக்குப் பெருமை" என்று மறுத்துவிட்டான்.
இப்போது அந்தக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் போது அந்த மனிதன் கடவுளிடம், "கடவுளே! அந்த மாளிகையை உனக்குக் கொடுத்து விடுகிறேன். என்னைக் காப்பாற்று" என்று கதறினான். 
அதே போல் நடந்தது. காற்று மறைந்தது. கடல் அமைதியானது. கப்பல் காப்பாற்றப்பட்டது. அவர்கள் எல்லோரும் கரை சேர்ந்தனர். 
கப்பலில் அப்படிச் சொன்னது அந்தப் பணக்காரனுக்கு இப்போது மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. 
முன்பு அந்தத் துறவி மீது கோபப்பட்டான்; ஆனால் இப்போது கோபப்படவில்லை. 
மாறாக, "ஒருவேளை நீங்கள் கூறியது போல் மெளனமாக இருந்திருந்தால் நல்லது. உங்களை நான் பின்பற்றியிருந்தால் என்னுடைய மாளிகையை இழந்திருக்க மாட்டேன்! ஆனால் நான் ஒரு வியாபாரி. இதற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிக்கிறேன்" என்று கூறினான். 
அதே போல் கண்டு பிடித்தான். 
மறுநாள் அந்த மாளிகையை அவன் ஏலம் விடுவதாக அறிவித்தான். பக்கத்தில் உள்ள அரசர்களுக்கு எல்லாம், யாரெல்லாம் ஆர்வம் கொண்டுள்ளார்களோ அவர்களுக்கெல்லாம் தெரிவித்தான். அரசர்களும், அரசிகளும், செல்வந்தர்களும் வந்தனர்.
அந்த அரண்மனையின் முன்னால் சலவைக்கல் தூணில் ஒரு பூனை கட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
அந்தப் பணக்காரன் வெளியில் வந்தான்.
"இந்த அரண்மனையும் பூனையும் சேர்த்து ஏலம் விடப்படும். இந்தப் பூனையின் விலை ஒரு மில்லியன் டாலர்! இந்த அரண்மனையின் விலை ஒரு டாலர்!. மொத்தம் ஒரு மில்லியன் ஒரு டாலர்" என்று கூறினான். 
கூடியிருந்தவர்கள், "இந்தப் பூனைக்கு ஒரு மில்லியன் டாலரா? அரண்மனைக்கு ஒரு டாலரா?" என்று கேட்டனர். 
அதற்கு அந்த வியாபாரி, "நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். விரும்பினால் இந்த இரண்டையும் சேர்த்து வாங்குங்கள். அதற்குக் குறைவாக நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதுதான் குறைந்த விலை. யாருக்காவது ஆர்வம் இருந்தால் வாங்குங்கள் " என்று கூறினான். 
அந்த நாட்டின் அரசன், "சரி, நான் அந்த விலையைக் கொடுக்கிறேன், ஆனால் தயவு செய்து இந்தப் பூனையையும் அரண்மனையையும் சேர்த்து ஏலம் விட்டதன் ரகசியத்தைக் கூறுவாயா?" என்று கேட்டான். 
வியாபாரி சொன்னான் :
"இதில் ரகசியம் ஏதும் இல்லை. நான் ஒரு பிரார்த்தனை செய்து அதனால் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். நான் கடவுளிடம் உனக்கு இந்த அரண்மனையைக் கொடுக்கிறேன்! என்று கூறினேன். நான் ஒரு வியாபாரி. அவர் ஒரு வியாபாரியாக இருந்தால் நானும் ஒரு வியாபாரிதான்! பூனை ஒரு மில்லியன் டாலர்; அதை நான் வைத்துக் கொள்வேன். இந்த அரண்மனை ஒரு டாலர்; அது கடவுளின் நிதிக்குப் போய்விடும் ".