10 April 2010

குறைகள் தடைகள் அல்ல!



     (உடல் ஊனம், வறுமை, குடும்பச் சூழல் போன்றவை நமது வளர்ச்சிக்குத் தடைச் சுவர்களாக இருக்க முடியுமா?) 
நாம் மட்டும் இன்னும் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தால்... கொஞ்சம் உயரமாய் இருந்திருந்தால்...
கொஞ்சம் சிவப்பாய் அழகாய் இருந்திருத்தால்...
கொஞ்சம் நன்றாகப் படித்திருத்தால்...
அவளைப்போல் நீண்ட முடியோடு இருந்தால்...
இப்படி ஏராளமான ஏக்கங்கள்!
மற்றவர்களைவிடத் தாம் மோசமாக இருப்பதால்தான் நம்மால் முன்னேற முடியவில்லை என்று நினைக்கிறோம்!
ஏங்குகிறோம்! புலம்புகிறோம்!
ஆனால் இது உண்மையா?
இந்தக் குறைகள் எல்லாம் தடைகளா? இந்தக் குறைகள் நம்மை வெற்றி பெறவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றனவா?
இந்தக் குறைகளை எல்லாம் மீறி வாழ்வில் வெற்றி கண்டவர்கள் இல்லையா?
உலக அழகி கிளியோபாட்ரா ஒரு கறுப்பழகிதானே!
உலகைச் சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் குட்டையானவர்தானே! அவரைவிடக் குட்டையா நாம்?
ஸ்டாலினும், ஆபிரகாம் லிங்கனும் பணக்காரக் குடும்பத்திலா பிறந்தவர்கள்? ஏழைகள்தானே!
நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்ன ‍அமெரிக்காவில் பிறந்தவரா? நர்சரிப் பள்ளியில் ஆங்கிலம் படித்தாரா?
உடல் ஊனங்களைக்கூட வென்று சாதனை படைப்பவர்கள் எத்தனை பேர்?
மிகப்பெரிய உலகக் கவிஞரான மில்டன் ஒரு பார்வையற்ற மனிதர்!
‍ஹெலன் கெல்லர் என்ற பெண்மணியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருக்குப் பேச்சு வராது! காதும் கேட்காது! பார்வையும் இல்லை.
இந்த உடல் ஊனங்கள் எல்லாவற்றையும் அவர் வென்று முன்னேறிச் சாதனை படைக்கவில்லையா?
மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட பலர் மீண்டும் நலம்பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டவில்லையா? நடக்கவே கூடாது என்று மருத்துவர்கள் போட்டத் தடையை மீறி ஒலிம்பிக் போட்டியில் ‍ெவற்றி கண்டவர்கள் இல்லையா?
காலையே இழந்த பிறகும், செயற்கைக் காலை வைத்துக்கொண்டு நடனத்துறையில் வெற்றி கண்ட அபூர்வத் தமிழ்ப்பெண்ணை நாம் நம் வாழ்நாளில் பார்த்ததில்லையா?
இவர்கள் எல்லாம் வரலாற்றில் என்றோ ஒருநாள், எங்கோ ஓர் இடத்தில் அத்தி பூத்ததுபோல் தோன்றுபவர்கள்! ஒரு சராசரி மனிதரால் இப்படியெல்லாம் சாதிக்க முடியுமா? என்று சிலர் முணுமுணுக்கக்கூடும்.
சிகரங்களைத் தொட்டவர்களும், தொடுபவர்களும் ஒரு சிலராக இருக்கக்கூடும்! ஆனால் எல்லாத் தடைகளையும் தாண்டி முன்னேறுபவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்!
கிராமங்களில் ஏழ்மைச் சூழலில் பிறந்து உழைத்து, முன்னேறியவர்கள் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள்!
வணிகத்துறையில்! அரசுப்பணிகளில்! கல்வித்துறையில்! திரைப்படத்துறையில்!
எந்தத்துறையில் கிராமத்து மண்வாசம் பரப்பவில்லை? எந்தத்துறையில் வறுமை வளமையாக மாறி ஒளி வீசவில்லை?
எனவே குறைகள் எல்லாம் நிறைவாக மாறக்கூடியவைதான்! தடைகள் எல்லாம் தாண்டக் கூடியவைதான்! நம்புவோம். வாழ்வில் முன்னேற்றம் காண்போம்.


வாழப் பழகுவோம் தொடரும்...

2 comments:

  1. தன்னம்பிக்கைதான் வாழ்க்கை என்று எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!.

    ReplyDelete
  2. தமிழினி நன்றி ..

    நன்றி அஷீதா ..

    ReplyDelete