18 August 2010

உமா சங்கருக்காக ஒரு கண்டனமும், அரசிடம் ஒரு வேண்டுகோளும்.....

ஊழல் நிறைந்த ஆட்சி நிலைத்து நிற்காது என்பது மனித நாகரீகம் தொடக்கத்தில் இருந்து நாம் பார்த்து கொண்டிருப்பது தான்!, எல்லாம் தெரிந்துமே இந்தியா ஊழலில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது, இதை சொல்வது சர்வதேச புள்ளிவிபரம்! அவர்களுக்கு தெரிந்தே இவ்வளவு என்றால் நாம் தினம் தினம் பார்த்து கொண்டிருப்பது எத்தனை, கால ஓட்டத்தில் மறைந்தது, அதை நாம் மறந்தது எத்தனை! சரி நமக்கு தெரிந்தே இத்தனை என்றால் நமக்கு தெரியாமல் எத்தனை இருக்கும்! ஆக ஊழலில் இந்தியாவின் இடம் டாப்பில் இருப்பது கண்கூடாக தெரிகிறது!

இதெற்கெல்லாம் யார் காரணம்!?, இந்தியன் படத்தில் ஒரு வசனம் வருமே, ”மற்ற நாடுகளில் கடமையை மீறுவதற்கு லஞ்சம், நம் நாட்டில் மட்டும் தான் கடமையை செய்வதற்கே லஞ்சம்”, பத்து, இருபது வாங்குபவனால் சமுதாயத்திற்கு பெரிய இழப்பு வந்துவிடுமா என்றால் இல்லை, அவைகள் உணவக டிப்ஸ் போல் ஆகிவிட்டது, ஆனால் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் மற்றும் ஊழலில் இந்தியாவில் களவாடப்படுகிறது, கூடவே நம் உரிமைகளும்.

சினிமாவில் ஹீரோ சாகசம் செய்தால் விசில் அடித்து கைத்தட்டுவோம், உண்மையில் அதே போன்ற துணிச்சலான செயலை ஒருவன் செய்தால், ”பாவம் பிழைக்கத்தெரியாதவன்.” உண்மையில் இம்மாதிரி பிழைக்க தகுதியில்லாத, கையாலாகாத, அதிகாரமையத்தை எதிர்க்கத்தெரியாத பொதுமக்களால் பல பல நேர்மையான அதிகாரிகள் தங்கள் பணியை விட்டே விலகி சென்றிருக்கிறார்கள்!, உங்களைப் போய் எதாவது சாகசம் செய்ய சொன்னார்களா? ஒருவன் அதிகாரமையத்திற்கு எதிராக போராடுகிறான், உனது ஆதரவு கரத்தையாவது நீட்டலாமே!

நூத்துக்கு முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்று ”ஆத்தா நானும் பாஸாகிட்டேன்” என்று எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சொல்ல முடியாது! அத்தனையும் உழைப்பு, அவர்களது நோக்கமும் மக்களுக்கு தொண்டாட்றுவது, ஆனால் அதிகாரமையத்தில் அமர்ந்தவுடன் தனக்கும் அதே புத்தி வந்து எத்த்னையோ அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு தங்களது கடமையை மறக்கிறார்கள், அவர்களுக்கு மத்தியில் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்கள், தன்ன்னால் கண்டுபிடிக்கபட்ட ஊழல் காரணமாக தற்பொழுது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

அவரது படிப்பை அவமான படுத்தியிருக்கிறார்கள், அவரது நேர்மையை அவமான படுத்தியிருக்கிறார்கள் காரணம், அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யபட்ட காரணமாகயிருந்த மயிருக்கும் பெறாத சாதி!, உமாசங்கர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட வேண்டும்! அவர் கண்டுபிடித்த ஊழல்கள் அனைத்தும் உடனே விசாரிக்கப்பட வேண்டும்!, இவைகளை மறுக்கும் தமிழக அரசிற்கு எனது கண்டணங்களை தெரிவித்து கொள்கிறேன்!



சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தோழரும் உங்களது கண்டணங்களையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்!, தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டிருக்கும் தருமி ஐயாவிற்கும் நன்றி! 


 

16 August 2010

வாழப் பழகுவோம்


   ஓவ்வொரு தனி மனிதருக்கும் சில குறைகள் இருக்கலாம்! அவற்றை நம் முன்னேற்றத்துக்குத் தடைகள் என்று நாம் கருதிக் கலங்கத் தேவையில்லை. எந்தக் குறையையும் வென்று காட்டமுடியும். இதைத்தான் நாம் ஆதாரங்களோடு இதுவரை பார்த்தோம்.
ஆனாலும் இவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்! வாழ்வின் எதார்த்தம்! போலிகள் அல்ல!
ஆனால் இல்லாத குறைகளையும் தடைகளையும் கண்டு நம்மில் எத்தனை பேர் மயங்குகிறோம்!
புகை மூட்டத்தைப் பூதமாகக் கருதி நடுங்குபவர் நம்மில் எத்தனை பேர்?
கடவுள் பெயரால் எத்தனை சண்டைகள்! கொள்ளைகள், உயிர்ப் பலிகள்.
பேயும் பூதமும் எங்கே இருக்கின்றன? கோழைகள், ஏமாளிகளின் மனதில் மட்டும்தானே இருக்கின்றன? ஆனால் பேய் ஓட்டுவதாகச் சொல்லும் எத்தைனை போலித்தனங்கள்? ஏமாற்று வித்தைகள்?
கடவுள் நமக்கு வழங்கியிருக்கும் கொடைதானே நேரம்? ஒரு நிமிடத்தை இழந்து விட்டால் அதை நம்மால் திரும்பப் பெற முடியுமா? நாம் வாழக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு நொடியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
‍‍‍ஜாதகம், ஜோசியம், குறி, கோடங்கி போன்றவற்றைத் தேடி நம்மில் எத்தனை பேர் அலைகிறோம்? எத்தனை பேர் கடவுள் கொடுத்த நேரத்தை எமகண்டம், ராகு காலம் என்று வீணடிக்கிறோம்?
நம் தலை எழுத்தை நாமே நிர்ணயிப்பதா? தம் பிழைப்பிற்கே வழியில்லாமல் ஆலமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் குறிகாரர்களும் ஜோதிடர்களும் நிர்மாணிப்பதா?
இன்று நம்மை ஏமாற்ற எத்தனை எத்தனை போலிகள் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள்?
உங்கள் பெயரில் இரண்டு எழுத்தைக் கூட்டினால், குறைத்தால், மாற்றினால் உங்கள் குறை எல்லாம் தீரும் என்கிறார்கள். அப்படியானல் ஒரே பெயரைக் கொண்ட எல்லாரும் ஒரே வாழ்க்கைத் தரத்தைப் பெற முடியுமா?
மோதிரக்கல்தான் உங்கள் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள்! வண்ணம் பூசப்பட்ட சாயக்கற்கள் வண்டி வண்டியாய் விலை போகின்றன!
வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் சேர்த்து ஒரு வீட்டைக் கட்டுகிறோம்! அந்த வீட்டை, வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் இடித்து, உடைத்து நம்மை மீண்டும் ஓட்டாண்டி ஆக்குகிறார்கள்!
இந்த வகையான ஏமாற்று வேலைகள் ஏராளமாக நடக்கின்றன! நவீன அறிவியலின் எல்லாக் கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு அறிவியல் பார்வையை மறைக்கப் பார்க்கிறார்கள்!
ஏமாறுவதும்! ஏமாறாமல் தப்பிப் பிழைப்பதும் நம் கையில்தான்!
சரி! நமது வளர்ச்சிக்கு நமது புறச்சூழலான நிஜங்களும் தடையில்லை! இந்த வகைப் போலிகளும் தடையில்லை!