01 June 2010

புலம்பலாமா?


      என்னங்க நல்லா இருக்கீங்களா?
இது நாம் அடிக்கடி கேட்கும் கேள்விதான். இதற்கு நம்மில் எத்தனை பேர் மலர்ந்த முகத்தோடு நன்றாக இருக்கிறேன் என்று பதில் சொல்கிறோம்?
ஏதோ இருக்கிறேன் ...
என்னத்தே, நான் நல்லா இருந்து...
இப்படிச் சுரத்தையில்லாத பதிலை எத்தனை முறை கேட்டிருக்கிறோம்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மற்றவர்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? கண்பட்டு விடக்கூடாது என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? மற்றவர்கள் கண்படுவது நமக்குக் கெடுதல் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?
காலையிலிருந்து மாலைவரை எதையாவது நினைத்துப் புலம்பிக் கொண்டே காலம் கழிப்பது சரிதானா?
சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றதுதானே, புலம்புவது அவ்வளவு பெரிய குற்றமா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆமாம், புலம்புவது உண்மையில் நம்முடைய எதிர்மறைச் சிந்தனைகளின் ஒரு வெளிப்பாடுதான்!
நமது துன்பமும் இன்பமும் பிறரிடமிருந்து வருவதில்லை. நாமே நமக்குள் வருவித்துக் கொள்வதான்.
நம்முடைய எண்ணம் போலத்தான் நம் வாழ்வும் அமையும்.
நல்ல எண்ணங்கள்தான் நல்ல செயல்களுக்கு வித்திடுகின்றன.
அவநம்பிக்கை, தோல்வி மனப்பான்மையை வளர்க்கும் சிந்தனைகள் நம்மை நிச்சயம் தோல்வியில்தான் கொண்டு ‍போய்சேர்க்கும்.
பல மாடிக் கட்டிடங்களுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கயிற்றில் நடக்கும் சாகசக்காரன் ஒருவன் இருந்தான். பல ஆண்டுகள் அனுபவம்... ஒரு நாள் சாகச நிகழ்ச்சியின் போது அவன் தவறி விழந்தான். பிழைக்கவில்லை.
அவன் மனைவி சொன்னாள் கடந்த சில நாள்களாகவே தவறி விழுந்து விடுவேனோ என்று ‍அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
தவறி விழுந்து விடுவோம் என்ற எண்ணம் மேலோங்கி விட்டால் அவ்வளவுதான். நாம் தவறுவது உறுதி!
இதைத்தான் இன்று நடத்தையியல் வல்லுநர்கள் எதிர்மறை மனப்பாங்கு (Negative attitude) என்கிறார்கள்.
எப்போதும் ஒரு புன்னகை.. உற்சாகமான சிந்தனை... உற்சாகமான பேச்சு... உற்சாகமான செயல்கள்... சில நாள்கள் தொடர்ந்து இப்படிப் பேசிப் பழகிப் பாருங்கள்...
உங்கள் நம்பிக்கை வட்டமும் நட்பு வட்டமும் மளமளவென்று வளர்ந்துவிடும்!
நல்ல சிந்தனைகளை வளர்ப்போம். அது நல்ல ஆளுமைப்பண்பை (Character) உருவாக்கும்.

நல்ல ஆளுமைப் பண்பை வளர்ப்போம். ‍அது நமது வாழ்வை நிர்ணயிக்கும்.

1 comment: